செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் - தமிழிசை

Published On 2018-06-14 03:56 GMT   |   Update On 2018-06-14 03:56 GMT
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். #18MLACase #Tamilisai
கோவை:

மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று திருப்பூரில் நடந்தது.

இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகமே பரபரப்பாக எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பை தான். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம்.

அது அரசியலில் அணுகுண்டாக மாற போகிறதா? புஷ்வாணமாக இருக்க போகிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

சபாநாயகர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோவையில் மழை பெய்து வருகிறது. ஆறுகள், குளங்கள் நிறைந்து வரும் நிலையில் நீரை சேமிக்கும் அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய கால கட்டத்தில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. 1 மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கப்படும் என்பது திருடர்களிடம் போட்டியாகவே நடத்தப்படுகிறது. எனவே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர்.

தற்போது போலீசார் ரோந்து படையை இறக்கி உள்ளனர். இதன் மூலம் நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை ஆகும்.



ராகுல்காந்தி மத்திய அரசை எவ்வளவோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் இன்று மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கட்சி கொடுத்து வருகிறது.

கார்த்திக் சிதம்பரம் மீதான 4500 பக்க குற்றப்பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரத்துக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இன்று ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் பா.ஜனதா கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. ராகுல் காந்தி நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணமாக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #18MLACase #Tamilisai

Tags:    

Similar News