செய்திகள்
13 பேர் சாவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: காயம் அடைந்த பாதிரியார் பேட்டி
தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விடமாட்டோம் என காயம் அடைந்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.
கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.