செய்திகள்
மரணமடைந்த யானை பாகன் கஜேந்திரனின் தந்தை கோபால் சோகத்தில் அமர்ந்திருக்கும் காட்சி.

யானைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த கஜேந்திரன் குடும்பம்

Published On 2018-05-26 13:54 IST   |   Update On 2018-05-26 13:54:00 IST
கோவில் யானைகளை பராமரிப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பாகன் கஜேந்திரனின் குடும்பம், தற்போது யானையால் நிர்கதியாகியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:

திருச்சி சமயபுரம் கோவில் யானை மசினி மிதித்ததில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாகன் கஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதை அடுத்து கஜேந்திரனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இறுதி சடங்கு நிகழ்ச்சியின் போது கஜேந்திரனின் தந்தை கோபால் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் பரம்பரை பரம்பரையாக கோவில் யானைகளை பராமரித்து வருகிறோம். எனது தந்தையும் யானை பாகன் தான். எனக்கு 3 மகன்கள். ஒரு மகன் ஷேசாஸ்த்திரி. திருவண்ணாமலை கோவில் யானையான ருக்குவுக்கு பாகனாக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் தாமோதரன். சேலம் ஆயிரத்து எட்டு சிவன் கோவில் யானைக்கு பாகனாக பணியாற்றி வருகிறார். கஜேந்திரன் சமயபுரம் கோவில் யானை பாகனாக பணியாற்றி வந்தான். இந்தநிலையில் அவன் வளர்த்து வந்த யானை மிதித்து கொன்றது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் குடும்பத்திற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்வதாக கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இறந்து போன கஜேந்திரனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மாலினி. அவர் இறந்து விட்டதால் 2-வதாக தேவிபாலாவை திருமணம் செய்துள்ளார். 2 மனைவிகள் மூலம் கஜேந்திரனுக்கு அச்சுதானந்தம், லட்சுமி பிரியா, விட்டல் கிருஷ்ணன், சுதாகரன் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். 
Tags:    

Similar News