ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்- தெலுங்கானா டிஜிபி தகவல்
- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
- 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்
இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.இந்நிலையில் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா டிஜிபி வெளியிட்டுள்ள செய்தியில் "போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1998 ஆம் ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். தற்போதும் அவர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்.
சிட்னியில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கும் அவரது நாடான இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் தெலுங்கானாவின் அவருக்கு எந்த உள்ளூர் தொடர்பும் செல்வாக்கும் இல்லை" என்று தெரிவித்தார்.