செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்

Published On 2018-05-23 08:46 IST   |   Update On 2018-05-23 08:46:00 IST
தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று தூத்துக்குடியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. #SterliteProtest #BanSterlite #SterlitePolicefiring
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் வரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது நிலைமை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூட்டை கண்டித்து  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது.



தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

மேலும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு செல்லும் டவுன் பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தூத்துக்குடியில் இன்று (மே 23) நடக்கவிருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. #SterliteProtest #BanSterlite #SterlitePolicefiring
Tags:    

Similar News