செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-19 04:11 GMT   |   Update On 2018-05-19 04:11 GMT
அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News