செய்திகள்

குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

Published On 2018-05-18 05:17 GMT   |   Update On 2018-05-18 05:17 GMT
சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பூர்:

சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி கொல்லத்தெரு பகுதியில் நேற்று மதியம் 5 பேர் கொண்ட கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கு வசித்து வரும் சிலர் கவனித்து, அவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் 5 பேரும் அங்கிருந்து நைசாக தப்பித்து வேறு இடத்திற்கு சென்றனர். பின்னர், இரவு 8 மணியளவில் கருப்பூர் மேல் வீதியில் நின்று கொண்டிந்த 6 வயது குழந்தையை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நைசாக பேசி கடத்த முயன்றதாக தகவல் வெளியானது.

இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் வருவதை அறிந்த 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.

இதனால் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கூறி பொதுமக்கள் அவரை தர்மஅடி கொடுத்து சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த நபரின் கைகளை கட்டி வைத்தனர். அவருக்கு வயது 30 இருக்கும் என தெரிகிறது.

இதுபற்றி கருப்பூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தமிழ் மொழியில் பேசாமல் இந்தியில் பேசியதால் போலீசாருக்கும், அங்கிருந்த மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் தெரியவில்லை. அவருடன் வந்த 4 பேர் யார்? இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கூலிவேலை செய்ய வந்தார்களா? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News