செய்திகள்

இரணியல் அருகே ஊஞ்சல் கட்டி ஆடியபோது தூண் விழுந்து சிறுமி பலி

Published On 2018-05-15 04:48 GMT   |   Update On 2018-05-15 04:48 GMT
இரணியல் அருகே இன்று காலை ஊஞ்சல் கட்டி ஆடியபோது தூண் விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரணியல்:

இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு பவுசிகா (13), ஜெபிஷா (7) என 2 மகள்கள் இருந்தனர்.

சுப்பிரமணியனுக்கும், தேவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தைகள் 2 பேரும் தேவிகாவுடன் இருந்தனர். மூத்த மகள் பவுசிகா அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், ஜெபிஷா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இன்று காலை பவுசிகா விழித்தெழுந்ததும் வீட்டின் வெளிப்புற உத்திரத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென கயிறு கட்டப்பட்டு இருந்த தூண் சரிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் பவுசிகா சிக்கி அலறினார். சத்தம் கேட்டு அவரது தாயார் தேவிகா ஓடி வந்தார்.

பவுசிகாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. தேவிகாவும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து பவுசிகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பவுசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு தேவிகா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதுபற்றி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News