செய்திகள்

பாலக்கோடு அருகே மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை

Published On 2018-05-10 04:35 GMT   |   Update On 2018-05-10 04:35 GMT
பாலக்கோடு அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மணியக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர்களுக்கு தன்யஸ்ரீ (5) என்ற மகள் உள்ளார்.

கலைச்செல்வி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டுவேலைகளை மட்டும் கவனித்து வந்தார். சீனிவாசன் தனது நிலத்தில் ஒரே ஆளாக நின்று எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கலைச்செல்வி வீட்டு வேலையையும், தோட்ட வேலையையும் செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சீனிவாசன் அவரிடம் எந்த வேலையையும் செய்யாமல் எதற்காக இப்படி இருக்கிறாய்? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் சீனிவாசன் தூங்க சென்றுவிட்டார். கணவர் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி தனது கணவர் அயர்ந்து தூங்கிய பின்பு அவரும் அவருடைய மகள் தன்யஸ்ரீயையும் அழைத்து கொண்டு வீட்டை வெளியே வந்தார்.

அப்போது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் தன்யஸ்ரீயை தூக்கி வீசினார். உடனே கலைச்செல்வியும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தனர்.

காலையில் எழுந்தவுடன் தனது மனைவியும், குழந்தையையும் படுக்கையில் இல்லாததை கண்டு சீனிவாசன் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மனைவி கலைச்செல்வியும், மகள் தன்யஸ்ரீயும் பிணமாக கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது மனைவி மற்றும் மகளின் உடலை பார்த்து கணவர் சீனிவாசன், அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து உறவினர்கள் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் சீனிவாசனிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News