செய்திகள்
கைதான சவுந்திரபாண்டியன், கொலை செய்யப்பட்ட விபின்

திண்டுக்கல் அருகே மகனை அடித்து கொன்ற சினிமா கதாசிரியர் உள்பட 3 பேர் கைது

Published On 2018-05-10 04:26 GMT   |   Update On 2018-05-10 04:26 GMT
போதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற வழக்கில் அவரது உடல் இன்று தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படுகிறது.
திண்டுக்கல்:

மதுரை டோக்நகர் எஸ்.பி.ஓ. காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன். (வயது 55). எழுத்தாளராக பணியாற்றிய இவர் ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற படத்துக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவரது மனைவி லதா பூரணம் (50). கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக உள்ளார். இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கோவில்பட்டியில் லதா பூரணம் தனியாக வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (27). முதுநிலை பட்டதாரியான இவர் தாய்-தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்தார். போதைக்கு அடிமையானவர். இதனால் தந்தையுடன் தகராறு செய்து அடிக்கடி பணம் வாங்கி செல்வார்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை. அவரது தாய் லதா பூரணம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் விலை உயர்ந்த காரை விபின் விற்று விட்டதால் அவருக்கும் தனது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு விபினை காணவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சவுந்திரபாண்டியனிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதிலளித்தார். எனவே அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் மறைமுகமாக அவரை கண்காணித்து வந்தனர். அதில் சவுபா தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரிய வந்தது.

போலீசாரிடம் சவுபா அளித்த வாக்குமூலத்தில், நான் விலை உயர்ந்த காரை எனது மகனுக்கு வாங்கி கொடுத்தேன். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வான். ஒரே மகன் என்பதால் அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தேன். ஆனால் நான் வாங்கிக் கொடுத்த காரை என்னிடம் சொல்லாமல் விற்று விட்டான்.

இது குறித்து நான் கேட்டபோது என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினான். இதனால் ஆத்திரமடைந்த நான் சுத்தியலால் அவனது தலையில் அடித்தேன். இதில் மயங்கி விழுந்து இறந்து விட்டான்.

திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு பகுதியில் எனக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு அவனது உடலை எடுத்துச் சென்றேன். பள்ளப்பட்டி மூப்பர் தெருவைச் சேர்ந்த பூமி (40), நிலக்கோட்டை காமராஜ் நகரைச் சேர்ந்த கனிக்குமார் என்ற கணேசன் (42) ஆகிய இருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தில் விபின் உடலை புதைத்து விட்டேன் என்று கூறினார்.

இதனையடுத்து போலீசார் சவுபா உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த பூமி மற்றும் கணேசனை கைது செய்தனர். விபின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

தாசில்தார் முன்னிலையில் அரசு டாக்டர்கள், சவுபாவை அழைத்து வந்து விபின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட வைக்கின்றனர்.

அதன் பிறகு உடல் தோண்டி எடுத்து அதே இடத்தில் பரிசோதனை நடைபெறும். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் ஏராளமான கிராம மக்கள் காலை முதலே அங்கு குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News