செய்திகள்

தரங்கம்பாடி அருகே ஆஸ்பத்திரி நடத்தி 2-வது முறையாக கைதான போலி டாக்டர்

Published On 2018-02-02 10:24 IST   |   Update On 2018-02-02 10:24:00 IST
2-வது முறையாக ஆஸ்பத்திரி நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரி குறித்து பொதுமக்கள் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார் அளித்தனர். இதில் ஆஸ்பத்திரி டாக்டர், டாக்டருக்கு படிக்காமலேயே சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர்கள் ராஜா, விஜயபாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி நடத்தி வந்த நடராஜன், டாக்டருக்கு படிக்காமலேயே தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

பின்னர் ஆஸ்பத்திரியை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கான 4 படுக்கைகள் கொண்ட அறைகள் இருந்தன. அங்கு இருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவ குழுவினர் கைப்பற்றி பொறையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், வனிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் நடராஜனை(வயது 45) கைது செய்தனர். கைதான நடராஜன் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர்.

போலி டாக்டர் நடராஜன், ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு மருத்துவக் குழு ஆய்வின்போது போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது இவர் மீண்டும் திருக்கடையூரில் ஆஸ்பத்திரி நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News