செய்திகள்

வேதாரண்யம் அருகே கரையில் ஒதுங்கிய இலங்கை படகு: போலீசார் விசாரணை

Published On 2018-01-03 16:02 IST   |   Update On 2018-01-03 16:02:00 IST
வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கி நின்ற பைபர் படகு இலங்கை சேர்ந்ததாகவும் போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

இலங்கையில் இருந்து மர்ம கும்பல் போதை பொருட்களை நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனால் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் கடத்தல் கும்பல் தீவிர கண்காணிப்பையும் மீறி படகு மூலம் வேதாரண்யத்துக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் வேதாரண்யம் அருகே மணியன் தீவில் இன்று காலை 6 மணியளவில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கி நின்றது. நீண்ட நேரமாக படகு நின்றதால் அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் படகில் ஏறி சுற்றி பார்த்தனர். அந்த படகில் என்ஜீன் இல்லாமல் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

இதைதொடர்ந்து மர்ம படகு குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து மர்ம படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் பைபர் படகு இலங்கையை சேர்ந்தது என்றும், போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் தீவு அருகே உள்ள காட்டில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு ஒரு புதரில் படகு என்ஜீன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த என்ஜீன் 75 எச்.பி. சக்தி கொண்டதாகும்.



பின்னர் சிறிது தூரம் தள்ளி பார்வையிட்ட போது அங்கு மண்எண்ணை கேன்களும் இருந்தன. இதையடுத்து என்ஜீன், மண்எண்ணை கேனை கைப்பற்றி மர்ம கும்பல் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம படகால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News