செய்திகள்

காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2017-10-22 17:00 IST   |   Update On 2017-10-22 17:00:00 IST
காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரைக்குடி:

காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.சி.ஏ. படிக்கும் மாணவ-மாணவிகள் 40 பேர் தஞ்சாவூருக்கு பஸ்சில் கல்விச்சுற்றுலா சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். தஞ்சாவூரில் போக்குவரத்து அதிகாரிகள் மாணவ-மாணவிகள் வந்த பஸ்சை ஆய்வு செய்தபோது பெர்மிட் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர். இதனால் மாணவ - மாணவிகள் அங்கேயே 2 வேன்களை பிடித்து இரவு ஊருக்கு புறப்பட்டனர்.

காரைக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைவேட்டி சித்தர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் வந்த வேன் ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த மாணவர் தினேஷ் (வயது 18) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 17 மாணவர்கள் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள் அகிலன், சந்தோஷ், பிரசாத், அச்சுதன், யோகேஸ்வரன், செல்வகணபதி, காசி ராஜன், விக்னேஷ், முரளி கிருஷ்ணன், மாணவி புனிதவள்ளி, விரிவுரையாளர் கருணாகரன், டிரைவர் அபுபக்கர் உள்பட 16 பேர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News