செய்திகள்

நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-07-22 04:29 GMT   |   Update On 2017-07-22 04:29 GMT
எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:

நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் (வயது 35), குமரன் (30), சக்திவேல் (23), அண்ணாதுரை (42), வீரையன் (30), பாலமுருகன் (35), ராஜேஷ் (25), மாரியப்பன் (32) ஆகிய 8 மீனவர்கள் கடந்த 17-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். பின்னர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வதால் அவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News