விருத்தாசலத்தில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள் இடிப்பு
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடல் அருகில் நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் 60 ஆண்டுகாலமாக தனிநபர் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்றக் கோரி சிலர் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலிசெய்து வெளியேர வேண்டும். இல்லையென்றால் அகற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், துப்புரவு அலுவலர் குமார், நகரஅமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், துப்புரவு ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜே.சி.பி.எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதை அறிந்ததும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். அதனால் எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளை இடித்தால் தீக்குளிக்கப்போவதாக மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜ.தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா மற்றும் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்பு அங்கு கட்டப்பட்டிருந்த 3 வீடுகளையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.