செய்திகள்

கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை-கொள்ளை

Published On 2017-03-26 07:27 GMT   |   Update On 2017-03-26 07:27 GMT
கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரம்:

மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 50). இவர் கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணிக்கு சென்றார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ரியல் எஸ்டேட் அலுவலக பூட்டை உடைக்க முயன்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அவர்களை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் மர்ம கும்பல் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டது.

இன்று காலை அவ்வழியே சென்று பொது மக்கள் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.வி., கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களுக்காக கொலை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

காவலாளி சுரேசுடன் ஏற்பட்ட மோதலில் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்ப ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் கொள்ளை நாடகம் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதேபோல் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை திருட வந்த போது தடுத்ததால் சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News