செய்திகள்

ஆசிரியை தாக்கியதால் மாணவி கைகள் வீங்கியது: போலீசில் பெற்றோர் புகார்

Published On 2017-01-05 14:23 IST   |   Update On 2017-01-05 14:23:00 IST
காஞ்சீபுரம் அருகே ஆசிரியை தாக்கியதால் மாணவி கைகள் வீங்கியது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் மாணவி காவ்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் காவ்யா. இவர் படுநெல்லி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் காவ்யா குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனை கண்டித்து ஆசிரியை ஒருவர் காவ்யாவின் கையில் பிரம்பால் தாக்கினார். அவரது இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதிகள் வீங்கியது.

வலியால் துடித்த காவ்யா பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் வகுப்பு அறையிலேயே அழுது கொண்டு இருந்தார். இதுபற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று காவ்யாவிடம் விபரம் கேட்டனர். அப்போது ஆசிரியை தாக்கியது குறித்து அழுது கொண்டு தெரிவித்தார்.



காயம் அடைந்த காவ்யாவுக்கு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் மாணவி காவ்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News