செய்திகள்
கோடியக்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை மீன்பிடி இறங்குதளம் அருகே கடற்கரையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.
வேதாரண்யம்:
கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை டால்பின் மீன்கள் வந்து செல்வது வழக்கம். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர்.
இந்நிலையில் இந்த சீசன் காலத்தில் இங்கு வரும் டால்பின் மீன்கள் படகில் அடிபட்டும், பல்வேறு இயற்கை மாறுபாடு காரணமாகவும் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று கோடியக்கரை மீன்பிடி இறங்குதளம் எதிரே சுமார் 5 அடி நீளமுள்ள 40 கிலோ எடையுள்ள டால்பின் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் சென்று இறந்து கிடந்த டால்பினை கடற்கரையில் புதைத்தனர்.