கர்நாடகாவுக்கு 20-வது நாளாக பஸ்கள் செல்லவில்லை
சத்தியமங்கலம்:
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம்- கர்நாடக மாநிலம் இடையே தற்போது கொஞ்சம் பதட்டம் குறைந்து உள்ளது. எனினும் காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பதால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவி வருகிறது.
இதையொட்டி இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை.
இன்று 20-வது நாளாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
சத்தியமங்கலம் பண்ணாரி, அரசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பஸ்களும் இதேபோல் கர்நாடகத்திலிருந்து வரும் பஸ்களும் இருமாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்புகிறது.
புளிஞ்சூரில் இறங்கும் இருமாநில மக்களும் பிறகு அங்கிருந்து தங்கள் மாநிலத்துக்கு பஸ்கள் ஏறி செல்கிறார்கள்.
அதேசமயம் கர்நாடகவிலிருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு கர்நாடக மாநில தனியார் பஸ்கள் மட்டும் தொடர்ந்து வந்து செல்கிறது. தாளவாடியில் இருமாநில மக்களும் சம அளவில் வசிப்பதால் அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
மேலும் பாதுகாப்பு கருதி தமிழக லாரிகளும் சத்தியமங்கலம் வழியாக தொடர்ந்து செல்லவில்லை. சில கர்நாடக மாநில லாரிகள் தமிழக பதிவெண் ஒட்டிய ஸ்டிக்கர்களுடன் வந்து செல்வதை பார்க்க முடிகிறது.
இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இரு மாநில போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்துக்கு லாரிகள் செல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கிறது.