செய்திகள்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: சத்தி-புளியம்பட்டியில் பதட்டம்

Published On 2016-09-23 11:43 IST   |   Update On 2016-09-23 11:44:00 IST
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பு.புளியம்பட்டி:

கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் நள்ளிரவில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையால் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. பஸ்களும் பல ஓடவில்லை. மேலும் ஓடிய பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் கொலையையொட்டி ஈரோடு மாவட்டத்திலும் பதட்டமும்-பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை-ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பு.புளியம்பட்டி, சத்திய மங்கலத்தில் பதட்ட நிலை நிலவி வருகிறது.

சத்தியமங்கலத்திலிருந்து பு.புளியம்பட்டி வழியாக கோவைக்கு 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் செல்லும். ஆனால் இன்று காலை அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை.

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள் அதிகமாக ஓடாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

பு.புளியம்பட்டியிலிருந்து நிறைய பேர் கோவையில் பல்வேறு பணியில் உள்ளனர். அலுவலகங்களில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் இன்று கோவை செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனால் பு.புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் பஸ் நிலையங்களில் கோவை செல்லும் பயணிகள் தவித்தப்படி உள்ளனர். சத்தியமங்கலத்திலிருந்து கோவை சென்ற ஒரு தனியார் பஸ் மீது திடீரென கல் வீசப்பட்டது. இதனால் சத்தியமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News