செய்திகள்

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-09-22 08:34 IST   |   Update On 2016-09-22 08:34:00 IST
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் எஸ்.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சாந்தினி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7-3-2013 அன்று வகுப்பில் இருந்த சாந்தினி, அருகில் இருந்த மாணவியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அதை பேராசிரியர் பால அரசு (வயது 44) பார்த்தார். அவர் மாணவி சாந்தினியை கண்டித்து கன்னத்தில் அறைந்தார். அனைத்து மாணவ-மாணவிகள் முன்னிலையில் அவர் இப்படி செய்தது, சாந்தினிக்கு அவமானமாக இருந்தது. வீட்டுக்கு வந்த அவர் சோகமாக இருந்தார். அன்றையதினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சாந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவி சாந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பால அரசு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி என்.திருநாவுக்கரசு விசாரித்து தீர்ப்பு அளித்தார்.

மாணவி சாந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பால அரசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

பேராசிரியர் பால அரசுவிடம் இருந்து வசூலிக்கும் அபராத தொகை ரூ.50 ஆயிரத்தை மாணவி சாந்தினியின் தாயார் லட்சுமிக்கு இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி என்.திருநாவுக்கரசு உத்தரவிட்டு இருந்தார்.

Similar News