செய்திகள்

சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவி: அரசு நடவடிக்கை எடுக்குமா?

Published On 2016-08-06 18:01 IST   |   Update On 2016-08-06 18:27:00 IST
அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரம் அருகே உள்ள சித்தகண்ணியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி. முருகேசன் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் வள்ளி.

இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இ.இ.இ. முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவரின் சேர்க்கைக்கான சான்றிதழ்களில் சாதிச் சான்றிதழையும் கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளது. உடனே வள்ளி, தான் சார்ந்த காட்டுநாயக்கன் சாதியின் பெயரை குறிப்பிட்டு அறந்தாங்கியில் உள்ள சேவை மையத்தில் மனு செய்துள்ளார்.

ஆனால் அவரின் மனு பரிசீலனைக்காக வருவாய்த்துறையினருக்கு சென்றபோது, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து வள்ளியின் தாயார் செல்வி அறந்தாங்கி தாசில்தார் அலுவலத்திற்கு சென்று கேட்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டு நாயக்கன் சாதிப் பெயரில் சான்றிதழ் வழங்க முடியாது என வருவாய்த்துறையினர் கூறிவிட்டனர். மேலும் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடைமுறைப்படி மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் எனக்கூறிவிட்டனர்.

இந்நிலையில் மாணவி படிக்கும் கல்லூரி நிர்வாகம் மாணவி காட்டுநாயக்கன் என்ற பெயரிலான சாதிச்சான்றிதழை உடனே கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சாதிச்சான்றிதழ் இல்லாவிட்டால், அவர் தனது படிப்பை தொடரமுடியாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி வள்ளி தனது தாயார் செல்வியுடன் சென்று அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தை அணுகினார். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி வள்ளி, நிருபரிடம் கூறியதாவது:-

மிகவும் ஒடுக்கப்பட்ட காட்டுநாயக்கன் சமூகத்தில் பிறந்த நான் எப்படியாவது படித்து ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து வருகிறேன். எனது ஆர்வத்திற்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வருவாய்த்துறையில் நான் சார்ந்த காட்டுநாயக்கன் சாதியின் பெயரை குறிப்பிட்டு, சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். நான் தொடர்ந்து கல்லூரியில் படிக்க வேண்டுமானால், சாதிச்சான்றிதழ் தரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் கேட்டு வருகிறது.

வருவாய்த்துறை தரமறுக்கும் ஒரு சான்றிதழ் இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து கல்லூரியில் படிக்க முடியும் என கல்லூரி நிர்வாகம் கூறிவருவதால், எனது கல்லூரி வாழ்க்கை சூனியமாகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நான் படித்தால் மட்டுமே என் குடும்பத்தை காப்பாற்ற முடியும். என்னை நம்பி உள்ள எனது குடும்பத்தை காப்பாற்ற, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எனக்கு காட்டுநாயக்கன் என்ற சாதியின் பெயரை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணம் கொடுத்து உதவியது போல, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News