கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை போட்டியை வீட்டில் இருந்து பார்ப்பது வித்தியாசமான அனுபவம்- ரோகித் சர்மா

Published On 2026-01-22 08:30 IST   |   Update On 2026-01-22 08:30:00 IST
  • ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.
  • இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன்.

புதுடெல்லி:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது குறித்து 38 வயதான ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்.

இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன். அது முன்பிருந்தது போல் இருக்காது. ஆனால் நிச்சயம் இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர் அறிவது முக்கியம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Tags:    

Similar News