கிரிக்கெட் (Cricket)

உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு!

Published On 2025-11-03 09:15 IST   |   Update On 2025-11-03 09:15:00 IST
  • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
  • உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தை கொடுக்கப் போகிறது. பயமறியா கிரிக்கெட்டின் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள். அனைத்து பாராட்டுகளுக்கும் நீங்கள் முழுமையாக தகுதி வாய்ந்தவர்கள். வெற்றியை சிறப்பாக கொண்டாடுங்கள். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News