மும்பை அணியில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பிரித்வி ஷா கடிதம்
- இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இந்திய அணி வீரர் பிரித்வி ஷா. இந்தியாவுக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 25 வயதான ஷா, மோசமான உடற்தகுதி மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக கடந்த ஆண்டு மும்பை ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு "அடுத்த சச்சின்" என புகழப்பட்டவர். ஆனால் காயங்கள், உடற்தகுதி பிரச்சனைகள் மற்றும் ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் சர்வதேச அணியில் நிலையான இடத்தை பெற முடியவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை. உள்ளூர் போட்டியிலும் மும்பை அணியில் அவர் இடம் பெறவில்லை.
கடைசியாக மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியின் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். அந்த ஆட்டத்தில் அவரது அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் மும்பை அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு பிரித்வி ஷா கடிதம் எழுதியுள்ளார்.