உங்களால் முடியாததை நாங்கள் செய்திருக்கிறோம்- முன்னாள் வீரர்களை சாடிய ஷதாப் கான்
- முன்னாள் வீரர்கள் ஜாம்பவான்களாக இருக்கலாம்.
- அவர்கள் யாரும் உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது இல்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறி உள்ளது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான முகமது யூசுப் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோர் ஷதாப் கான், பாபர் அசாம் உட்பட சில மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் வீரர்களின் கருத்துகளுக்கு ஆல் ரவுண்டர் ஷதாப் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முன்னாள் வீரர்கள் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது இல்லை. நாங்கள் (தற்போதைய அணி) 2021-ல் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளோம்.
ஒரு மோசமான ஓவர் அல்லது ஒரு மோசமான போட்டியை வைத்து ஒட்டுமொத்தத் திறமையையும் விமர்சிப்பது சரியல்ல. டி20 கிரிக்கெட்டில் இது போன்ற ஏற்ற இறக்கங்கள் சகஜம்.
மேலும் சிறந்த உள்ளூர் வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடுகிறார்கள் என்றும், அதை வைத்தே வீரர்களின் தரத்தை முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.