கிரிக்கெட் (Cricket)

2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த முத்துசாமி - 300 ரன்களை கடந்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2025-11-23 11:07 IST   |   Update On 2025-11-23 11:07:00 IST
  • பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது.
  • தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பவுமாவிற்கு அடுத்தபடியாக முத்துசாமி அரைசதம் அடித்துள்ளார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா அணி 111 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 56 ரன்களுடனும் வெரெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Tags:    

Similar News