null
இந்திய அணிக்கு பேரிடி.. 2-வது டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?
- லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
பிர்மிங்காம்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக பும்ரா இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் அதிக ஓவர்களையும் அவர் வீசினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.
எனவே அந்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் 2-வது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் பும்ரா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.