ஐபிஎல் 2025: தொடக்க ஜோடி அபாரம்- கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்
- பிரியான்ஷ் ஆர்யா 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
- பிரப்சிம்ரன் சிங் 49 பந்தில் 83 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.
முதல் ஓவரில் 10 ரன்களும், 3ஆவது ஓவரில் 12 ரன்களும், 4ஆவது ஓவரில் 18 ரன்களும், 5ஆவது ஓவரில் 11 ரன்களும், விளாசினர். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்று 56 ரன்கள் சேர்த்தது.
10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது. 12 ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஆர்யா ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அப்போது பஞ்சாப் 11.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்திருந்தது.
அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மார்கோ யான்சன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணிக்கு 17 ஆவது ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 174 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் கிடைத்தன. 184 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க பஞ்சாப் 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.