கிரிக்கெட் (Cricket)

கொல்கத்தா டெஸ்ட்: 124 இலக்கை எட்ட முடியாமல் இந்தியா படுதோல்வி

Published On 2025-11-16 14:20 IST   |   Update On 2025-11-16 14:20:00 IST
  • 2ஆவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 153 ரன்கள் சேர்த்தது.
  • இந்தியா 93 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

30 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 29 ரன்களுடனும், போஸ்ச் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது.

பவுமா- போஸ்ச் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. போஸ்ச் 25 ரன்கள் அடித்தார். பவுமா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவைவிட 123 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து யான்சன் பந்தில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். ஜுரல் 13 ரன்னிலும், பண்ட் 2 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் குல்தீப் யாதவ் 1 ரன்னிலும், சிராஜ் ரன்ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 2ஆவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2ஆவது இன்னிங்சில் ஹார்மர் 4 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சுப்மன் கில் 2ஆவது இன்னிங்சில் களம் இறங்கவில்லை.

Tags:    

Similar News