ரோகித்- ஷ்ரேயாஸ் அரை சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- இந்திய தரப்பில் ரோகித்- ஷ்ரேயாஸ் அரை சதம் அடித்தனர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ஓவரில் சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால் 17 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது.
இந்நிலையில் ரோகித்- ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வபோது பவுண்டரியும் சிக்சர்களையும் பறக்கவிட்ட இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது.
சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் 61 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து கேஎல் ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ் ரெட்டி 8 என அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய அக்ஷர் படேல் 44 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 226 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.