CSK-ல் இருந்து கான்வே, ரவீந்திரா விடுவிப்பு: பத்திரனாவையும் விடுவிக்க உள்ளதாக வெளியான புதிய தகவல்
- சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர்.
- மேலும் பல வீரர்களை விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது.
இதற்காக தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல சி.எஸ்.கே. அணியில் இருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர். இதற்கு இரு அணி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்று காலை வெளியானது.
10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சி.எஸ்.கே. அணியில் இருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா கழற்றி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் பங்குபெற உள்ளனர்.
மேலும் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரையும் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக பத்திரனாவை விடுவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை மினி ஏலத்தில் மிகவும் மலிவான விலையில் திரும்பப் பெற அவர்கள் முயற்சிப்பார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.