கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் போட்டியில் உலக சாதனை: 36 ஆண்டு கால சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா வீரர்

Published On 2025-09-05 12:27 IST   |   Update On 2025-09-05 12:27:00 IST
  • 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • பிரீட்ஸ்கே தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

லண்டன்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதற்கிடையே, இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்னும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்னும் குவித்தனர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்நிலையில், இந்தப் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 50 ரன்களுக்கு மேல் (150, 83, 57, 88 மற்றும் 85 ரன்) எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் 5 ஆட்டங்களில் அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

இதற்கு முன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் 4 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 36 ஆண்டு கால சாதனையை 26 வயதான பிரீட்ஸ்கே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News