கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போராடி தோற்ற நேபாளம்

Published On 2026-02-08 18:42 IST   |   Update On 2026-02-08 18:47:00 IST
  • இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
  • நேபாளம் அணியின் தீபிந்திர சிங் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 5வது போட்டியில் நேபாளம் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம்கண்டன. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி நேபாளம் அணியின் அபாரமான பந்துவச்சில் சற்றே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி 53 ரன்களையும் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 39 ரன்களை (1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) எடுத்தார்.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபிந்திர சிங், நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷெர் மல்லா, சந்தீப் லமிஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

185 ரன்களை துரத்திய நேபாளம் அணிக்கு ஆசிஃப் ஷேக் (7), குஷல் 29 ரன்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்), கேப்டன் ரோகித் பௌடெல் 39 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) , தீபிந்திர சிங் 44 (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) ரன்களை அடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் நேபாளம் அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.

நேபாளம் சார்பில் லோகேஷ் பாம் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நேபாளம் அணி 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவானது. கடைசி ஓவர்களில் லோகேஷ் மற்றும் கரண் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் லேகேஷ் பாம் 1 ரன் எடுக்க நேபாளம் அணி போராடி தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

Tags:    

Similar News