சென்னையில் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி தொடங்கியது
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.