விளையாட்டு
ஆர்யன் நெஹ்ரா, லக்சயாசென்

துபாயில் பயிற்சி பெற இந்திய நீச்சல் மற்றும் பேட்மிண்டன் வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2022-05-26 20:56 GMT   |   Update On 2022-05-26 20:56 GMT
நீச்சல் வீரர் ஆர்யன் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த  18 வயதான ஆர்யன் நெஹ்ரா சிறந்து விளங்குகிறார். 

கடந்த 2017ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 5 தங்கப்பதக்கங்களை வென்றார்.

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக இளையோர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தயாராகுவதற்காக துபாயில் உள்ள அக்வா தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறவேண்டும் என்ற நீச்சல் வீரர் ஆர்யன் நெஹ்ராவின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு இந்திய ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது.  அவர் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளது. 

விமானக் கட்டணம், தங்கும் செலவு, பயிற்சியாளர் கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை இத்தொகையில் அடங்கும்.

இதேபோல், உலகின் முதல்நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயி்ல் பயிற்சி பெறவேண்டும் என்ற இந்திய வீரர் லக்சயாசென்னின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்க கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

இந்த மாதம் நடைபெற்ற  தாமஸ் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற லக்சயா சென்,  மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ள பயிற்சியில் விக்டர் அக்சல்சன்னுடன்  பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார். 

பின்னர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியிலும் பங்கேற்க லக்சயாசென் முடிவு செய்துள்ளார். 
Tags:    

Similar News