செய்திகள்
விராட் கோலி

கேப்டன் பதவியில் இருந்து கோலி முழுமையாக விலக வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொல்கிறார்

Published On 2021-11-14 04:03 GMT   |   Update On 2021-11-14 04:03 GMT
20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
லாகூர்:

20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் விராட்கோலி 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘விராட்கோலி, இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான சக்தியாக இருக்கிறார். 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். 

தற்போது அவர் எல்லா வகையிலான போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்க முடிவு செய்தால் அவருக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து முழுமையாக விலகி தனக்கு எஞ்சியிருக்கும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர் ஒரு வீரராக ஆடினால் மனதில் வேறு எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடி இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.



20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது நல்ல முடிவாகும். அவருடன் ஐ.பி.எல். போட்டியில் நான் ஒரு வருடம் விளையாடி இருக்கிறேன். அவர் அற்புதமான வீரர் மட்டுமின்றி அணியை நன்கு வழிநடத்தும் மனதிறமையும் கொண்டவர். அமைதியான அணுகுமுறையை கொண்ட அவர் தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் செயல்படக்கூடியவர். அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பலமுறை வெற்றிகரமாக வழிநடத்தி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News