செய்திகள்
முதல் டி20 போட்டி - 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்தார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
கொழும்பு:
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் சரித் அசலங்கா 26 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவரில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.