செய்திகள்
முகமது சிராஜ்

இங்கிலாந்து தொடரையும் கைப்பற்ற உதவியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்: முகமது சிராஜ்

Published On 2021-01-31 16:37 IST   |   Update On 2021-01-31 16:37:00 IST
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான முகமது சிராஜ், இங்கிலாந்து தொடரில் அவ்வாறு செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட் சாய்த்தார். மூன்று போட்டிகளில் விளையாடினாலும் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா தொடரை போன்று இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன் என முகமது சிராஜ் தெரிவித்துதள்ளார்.

இதுகுறித்து முகமது சிராஜ் கூறுகையில் ‘‘நான் எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடரில் செய்தது போன்று இங்கிலாந்து தொடரிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவ விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடர் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராகவும் அதேபோன்று செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் அதிக அளவில் கற்றுக்கொண்டேன். வீரர்கள் அறையில் இருந்து வலைப்பயிற்சி வரை புஜாரா, ரஹானே, ஷமி, ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் அதிக அளவில் கற்றுக்கொண்டேன். இங்கிலாந்துக்கு எதிரான அந்த அறிவை பயன்படுத்துவேன்.

நான் பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூருடன் இணைந்து பந்து வீசியுள்ளேன். அவர்கள் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். தற்போது இஷாந்த் சர்மாவுடன் இணைந்து பந்து வீச ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு கற்றுக்கொள்ள மிகப்பெரியதாக இருக்கும்’’ என்றார்.

Similar News