செய்திகள்
பொறுப்பற்ற ‘ஷாட்’ அடிப்பதா? ரோகித் சர்மா மீது கவாஸ்கர் பாய்ச்சல்
முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
பிரிஸ்பேன்:
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 24 பந்தில் 6 பவுண்டரியுடன், 44 ரன்கள் அடித்தார்.
ரோகித் சர்மா நாதன் லயன் பந்துவீச்சில் சிக்சர் அடிப்பதற்காக கிரீசை விட்டு வெளியே வந்து தூக்கி அடித்தார். ஆனால் பந்து ‘ஸ்கொயர்லெக்‘ திசையில் நின்ற ஸ்டார்க் கையில் தஞ்சம் புகுந்தது.
முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஸ்கொயர்லெக் திசையில் பீல்டர் இருக்கிறார். அந்த பகுதியில் ரோகித் சர்மா சில பவுண்டரிகளே அடித்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் ஏன் சிக்சர் அடிக்க முற்பட்டு அபாயமான ஷாட்டை ஆட வேண்டும்? அது மாதிரியான ஷாட் தேவையே இல்லை. பொறுப்பற்ற ஷாட் ஆகும்.
ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர். அவர் அடித்த ஷாட்டுக்கு மன்னிப்பே இல்லை. அவர் தேவையில்லாமல் தனது விக்கெட்டை வீணடித்து விட்டார். முற்றிலும் தேவை இல்லாமல் அவர் ஆட்டம் இழந்தார்.
இந்த தருணத்தில் அவர் நிதானமாக ஆடி பெரிய அளவில் ரன்னை குவித்திருக்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
கவாஸ்கரின் விமர்சனத் துக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாதன் லயன் பந்தில் நான் ஆடிய ஷாட்டுக்காக வருத்தப்படவில்லை. எப்போதுமே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அது போன்ற ஷாட்களை நான் ஆடுவேன்.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஷாட்களை ஆடி இருக்கிறேன். லயன் சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது சிறந்த பந்துவீச்சால் என்னை சிக்சர் அடிக்க விடாமல் வீழ்த்தி விட்டார் என்றார்.