செய்திகள்
சவுத்தாம்ப்டன் டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து
சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார்.
கிராவ்லி 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களை கடந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ரன்களையும், பட்லர் 152 ரன்களையும் விளாசியிருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.