செய்திகள் (Tamil News)
உலகக்கோப்பை ஊதியத்தை ஆதரவற்றோருக்காக அளிக்க உள்ள 19 வயது கால்பந்து வீரர்
உலகக்கோப்பை போட்டிக்காக தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் மாற்றுதிறனாளி மற்றும் ஆதரவற்றோரின் விளையாட்டுக்காக பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே தெரிவித்துள்ளார். #KylianMbappe
கிலியான் மப்பே என்ற பெயர் உலகம் முழுவதும் தற்போது சென்று சேர்ந்துள்ளது. ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாக்-அவுட் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக பிரான்ஸ் அணி வீரர் மப்பே இருந்துள்ளார்.
19 வயதான மப்பே அடித்த இரண்டு கோல்களால் அர்ஜென்டினா அணி வெளியேறியது. இந்த போட்டியை அடுத்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த மப்பே, தற்போது இன்னொரு நெகிழ்வான செயலாலும் அனைவராலும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த உலககோப்பையில் விளையாடுவதால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரான்ஸில் உள்ள ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுக்காக செலவிட உள்ளார்.
இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2 கோடியை தொடும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்கள வீரராக இருக்கும் மப்பே, பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.