செய்திகள்

விராட் கோலி ரன்கள் குவிக்கும்போது அவரைச் சீண்ட வேண்டும்: ஸ்டீவ் வாக் யோசனை

Published On 2017-02-22 14:29 GMT   |   Update On 2017-02-22 14:29 GMT
விராட் கோலி ரன்கள் குவிக்கத் தொடங்கும்போது, அவரைச் சீண்ட வேண்டுமென ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் யோசனை தெரிவித்துள்ளர்.
சிட்னி:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில், விராட் கோலி ரன்கள் குவிக்கும் போது அவரைச் சீண்ட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

''போட்டியின் ஆரம்பத்திலேயே விராட் கோலியை சீண்ட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் கோலி ரன்களை குவிக்கத் தொடங்கும்போது அவரைச் சீண்ட வேண்டும். எல்லோரையும் போல கோலியும் சீண்டினால் பாதிக்கப்படக் கூடியவர்தான். தற்போது அவர் கடும் நெருக்கடியில் உள்ளார்.

ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும் போதும் 100 ரன்கள் குவிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். ரசிகர்களின் விருப்பத்தை கோலி பெரும்பாலும் நிறைவேற்றியே வருகிறார் என்றாலும், சில நேரங்களில் நேரம் அவருக்கு எதிராகத் திரும்பலாம்.



மோசமான ஷாட் அல்லது கவனம் சிதறுவது போன்ற தருணங்கள் கோலிக்கும் வரலாம். அப்போது அந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் எல்லா அணிகளுக்கும் எதிராக ரன்களைக் குவித்து வருகிறார்.

கோலி ஒவ்வொரு பந்துக்கும் முன்னுரிமை அளிப்பதால், சவாலான எதிரணி வீரராக அவர் திகழ்கிறார். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு இது உண்மையிலேயே சவாலான தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை''.

இவ்வாறு ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலிய அணிக்கு யோசனை தெரிவித்துள்ளார்.


Similar News