செய்திகள்

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 426 ரன்கள் குவிப்பு

Published On 2017-01-13 13:30 GMT   |   Update On 2017-01-13 13:30 GMT
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 426 ரன்கள் குவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 10 ரன்கள் எடுத்த நிலையிலும், எல்கர் 27 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.


சதம் அடித்த மகிழ்ச்சியில் அம்லா

தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.


சதம் அடித்த மகிழ்ச்சியில் டுமினி

அம்லாவிற்கு இது 100-வது போட்டியாகும். 100-வது போட்டியில் களம் இறங்கிய அவர் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த டுமினி 155 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரின் சதங்களால் தென்ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்திருந்தது. அம்லா 125 ரன்னுடனும், ஆலிவியர் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர்.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆலிவியர் 3 ரன்னிலும், அம்லா 134 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டி காக் 34 ரன்னுகளும், பர்னெல் 23 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னி்ங்சில் 426 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் பிரதீப், லஹிரு குமாரா தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.


பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டி காக்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது. பிளாண்டர் வீசிய 4-வது பந்தில் கருணாரத்னே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். இலங்கை அணி 10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News