2025 - ஒரு பார்வை

2025 REWIND:இந்தியாவையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்: டூரிஸ்ட்களை சுட்டுக் கொன்ற அட்டூழியம்

Published On 2025-12-11 22:01 IST   |   Update On 2025-12-11 22:01:00 IST
  • ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
  • ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.

அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.

அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.

இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.


இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.


இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.

அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.

Tags:    

Similar News