சிறை பிடிக்கப்பட்டுள்ள 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்
- மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
- 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜூவாலலைதீன் துறைமுகத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழாகா சாகுடி பகுதியை சேர்ந்த கலைமணி மற்றும் முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான படகுகள், உள்ளூர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதத்துக்கு சொந்தமான 2 படகுகள் என மொத்தம் 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விரைந்து விடுவிப்பதற்கு ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.