புதுச்சேரியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் ரகசிய சர்வே
- புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.
- கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டாலும், மாநில அளவிலான தேர்தல்களில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் எதிர் எதிரில் போட்டியிட்டது. அடுத்த ஆண்டில் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி என அடுத்தடுத்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கோட்டை என கருதப்பட்ட புதுச்சேரி கடந்த சட்டமன்ற தேர்தலில் கைநழுவி போனதோடு, 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்து பலகீனமாகியுள்ளது.
இதனால் புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி கண்டது.
ஆனாலும் இந்த வெற்றியை காங்கிரசாரால் முழுமையாக தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க. சரிபாதி தொகுதிகளை பிரித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
அதோடு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதுதான் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என தி.மு.க. உரக்க குரல் கொடுத்து வருகிறது. அதோடு, சுமார் கால் நுாற்றாண்டாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறது.
இதனால் அவ்வப்போது இந்தியா கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்ற ரீதியில் தி.மு.க. பேசியும், செயல்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவதுபோல, புதுச்சேரிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என காங்கிரசார் அடித்து கூறி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க.வும், காங்கிரசும் இப்படி மோதி கொள்ளும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆகிய கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை எதிர்த்து தனித்தனி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த புதிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், கூட்டணியை பற்றி காங்கிரசார் கவலைப்பட வேண்டாம். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை தொடங்குங்கள், பூத்களை வலுப்படுத்துங்கள் என கூறினார்.
இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டணி பற்றி தேர்தலின்போது முடிவு செய்யலாம், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ? அவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும். கூட்டணி கட்சிகளின் தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என தெரிவித்துள்ளனர். அதோடு காங்கிரஸ் சார்பில் தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட அகில இந்திய தலைமை தனியார் நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதில், புதுவை, காரைக்காலில் 12 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது புதுச்சேரி காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு சில தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதிகள். இருப்பினும் இந்த தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பெரும் வகையில் இன்னும் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி, அந்த தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனால் கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.