இந்தியா

முடிவுக்கு வந்த 400 மணி நேர போராட்டம்: சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்கள் மீட்பு

Published On 2023-11-28 14:33 GMT   |   Update On 2023-11-28 14:57 GMT
  • கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர்.
  • தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

அதுவும் பழுதாகியதால், செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்றது.

இதற்கிடையே, தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்துள்ளனர்.

சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொழிலாளர்கள் 41 பேரையும் வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றனர்.

இந்நிலையில், முதல் கட்டமாக 15 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 400 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் விளைவாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News