அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை
- ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
- அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.
அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.
நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.