இந்தியா

தாய்- 3 மகள்கள் மீது திருட்டு பட்டம்: ஊர்வலமாக இழுத்து சென்ற கொடுமை - 2 பேர் கைது

Published On 2025-01-23 10:37 IST   |   Update On 2025-01-23 10:37:00 IST
  • வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • பஞ்சாப் மாநில மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

லூதியானா:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஹதுர்கே சாலையில் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணும், அவரது 3 மகள்களும் அங்கிருந்து ஆடைகளை திருடியதாக தொழிற்சாலை ஊழியர்கள் சந்தேகப்பட்டனர். அதன்பேரில் அந்த பெண்ணையும், அவரின் 3 மகள்களையும் பிடித்து விசாரணை நடத்திய சிலர் அவர்களின் முகத்தில் கருப்பு புள்ளிகள் குத்தியதோடு நான் ஒரு திருடன், என் தவறை ஒப்புக்கொள்கிறேன் என்று எழுதப்பட்ட பலகைகளை அந்த பெண் மற்றும் அவரின் 3 மகள்கள் மீதும் அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொழிற்சாலை உரிமையாளரான பர்விந்தர்சிங், மேலாளர் மன்பிரீத்சிங் மற்றும் முகமது கைஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த செயலை குழந்தைகள் உரிமை மீறல் என்று கூறியுள்ள ஆணைய தலைவர் கன்வர்தீப்சிங், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதைப்போல பஞ்சாப் மாநில மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Tags:    

Similar News